தமிழகத்தில் நாளை இரவு தொடங்கி அடுத்த மூன்று நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 30, 1, 2 ஆகிய நாட்களில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கபட்டுள்ளது. 


இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில்; கடந்த 24 மணி நேரத்தில் தாம்பரத்தில் 15 செ.மீட்டர் மழையும், ஜெயங்கொண்டத்தில் 10 செ.மீட்டரும், காட்டுமன்னார்கோவிலில் 8 செ.மீட்டரும், சீர்காழியில் 7 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறினார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை இரவு முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு பலத்த மழை தொடங்குமென அவர் குறிப்பிட்டார். கன முதல் மிக கனமழை பெய்யக்கூடுமென அவர் தெரிவித்தார்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடுமென புவியரசன் குறிப்பிட்டார். அடுத்த 24 மணி நேரத்திற்கு இலங்கையின் தெற்கு கடல் பரப்பிற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். அடுத்த மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடரும் என்றும், 20 நாட்கள் வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.


தமிழகத்தில் நடப்பு மாதத்தில் இப்போது வரை 35 செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்ய வேண்டிய நிலையில் 32 செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாகவும், சென்னையில் 59 செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்ய வேண்டிய நிலையில் 39 செ.மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.