தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் 2019 ஜனவரி 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் இதற்கான உத்தரவை  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இது சமூக மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 


இந்நிலையில், இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு நீதிபதிகள், வைத்தியநாதன், பி.டி. ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உணவுப் பொருட்கள் பொதியப்பட்ட பிளாஸ்டிக்குக்கு அரசு விலக்கு அளித்திருப்பது சட்டவிரோதமானது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.


பன்னாட்டு நிறுவனங்களையும், மொத்த விற்பனை நிறுவனங்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அரசுத் தரப்பு வாதத்தின் போது, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அரசாணைகளை, அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் உறுதிசெய்துள்ளதாகவும் முறையிடப்பட்டது.


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கு விலக்கு அளித்தது ஏற்க முடியாது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், மொத்தமாக தடை விதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.