சென்னை - சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பு வரும் 8-ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூபாய் 10,000 கோடி செலவில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ள சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம், சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்த திட்டத்திற்காக சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.


இதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்து போராட்டம் மேற்கொண்டனர். இதன் காரணமாக தீவிர போராட்டத்திலும் மக்கள் ஈடுபட்டனர்.


இதற்கிடையில் இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். அதேபோல, தர்மபுரி எம்.பி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.


நீதிபதிகள் டி.எஸ்,. சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தனர். கடந்த 8 மாதங்களாக இந்த வழக்கினை நீதிபதிகள் விசாரித்து வந்தனர்.


இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து, கடந்த ஜனவரி 4-ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.