தமிழகத்தில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையில் Red_Alert எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் எனவும், வரும் 7-ஆம் தேதி(நாளை) தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதன் காரணமாக தமிழகத்திற்கு Red_Alert எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவிக்கையில்...


"நாளை மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லாத நிலையில் Red_Alert எச்சரிக்கை வாபஸ் பெறப்படுகிறது.


எச்சரிக்கை திரும்பப்பெறப்படுகிறது, எனினும் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமாரி, லட்சதீவு பகுதி மக்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மத்திய, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்


கோவை, நீலகிரி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை, எனினும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.


முன்னதாக இன்று தமிழ்நாடு வானிலை ஆர்வலர் வெதர்மேன் தனது முகப்புத்தக வாயிலாக தெரிவிக்கையில்... 



"வரும் 7-ஆம் தேதி(நாளை) விடுக்கப்பட்டுள்ள Red_Alert குறித்து கேரளம் மற்றும் தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம். சொல்லப்போனால் 7-ஆம் தேதியை விட 8-ஆம் தேதி தான் கூடுதல் மழை பெய்யும். அரபிக் கடலில் உருவாக இருக்கும்  புயல் நமது கரையிலிருந்து மிகத் தொலைவில் இருப்பதால் கிழக்கில் இருந்து வரும் காற்றை மட்டும் இது வலுப்படுத்தும். எனவே தமிழக மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை" என தெரிவித்துள்ளார்