கைவினைஞர்கள் பற்றியும் அவர்கள் திறமை தொடர்பான தகவல்களையும் சேகரிக்க தனி வலைதளம் தமிழக முதல்வர் அறிவிப்பு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டது:-


''தமிழகத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்கள் பற்றியும் அவர்கள் திறமை தொடர்பான தகவல்களையும் சேகரித்து தனி வலைதளம் உருவாக்க புதுமை முயற்சிகள் திட்டத்தின் கீழ் (Tamil Nadu Innovations Initiatives)  2015-16ல் ரூ.1 கோடி நிதியை தமிழ்நாடு கைத்திறத்தொழில்கள் வளர்ச்சிக் கழகத்துக்கு அளித்தது.


இந்த வலைதளத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கைத்திறக் கைவினைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பக்கங்கள்(individual web page)  உருவாக்கப்பட்டுள்ளன. இதில் கைவினைஞர்கள் மற்றும் அவர்கள் திறமைகள் பற்றிய தகவல்கள் சேமிக்கப்படும். இதன் மூலம் கைவினைஞர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் சமுக வலைத்தளங்கள் மூலம் உலகமெங்கும் சென்றடைய வழிவகை செய்யப்படும்.


தமிழகத்தில் உள்ள 2 லட்சம் கைவினைஞர்கள் இந்த தொகுப்பில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 10,000 கைவினைஞர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு, 500 கைவினைஞர்களின் தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கைவினைஞர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கைவினைஞர்கள் பற்றியும் அவர்களது திறமைகள் தொடர்பான அனைத்து தகவல்கள் அடங்கிய www,tnartisaan.com என்ற வலைதளத்தை பொதுமக்கள் பயனடையும் வகையில் முதல்வர் கே.பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். 


மேலும், முதல்வர் கே.பழனிசாமி அவர்கள் கடந்த 2016-17ம் நிதியாண்டுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட 65 வயதுக்கு மேற்பட்ட 9 திறன் மிகு கைவினைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம், 1 கிராம் தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். மேலும் 2016-17ம் ஆண்டிற்கான பூம்புகார்மாநில விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட12 சிறந்த கைவினைஞர்களுக்கு தலா ரூ.50,000 காசோலை, 4 கிராம் தங்கப்பதக்கம், 1 கிராம் தாமிரப் பத்திரம் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவித்தார்.