தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (28.12.2017) தலைமைச் செயலகத்தில், அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மறைந்த செல்வி அனிதாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் நிதி உதவியாக 7 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது தந்தையிடம் வழங்கினார்கள். மேலும், செல்வி அனிதாவின் சகோதரர் திரு.சதிஷ்குமாருக்கு தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வழங்கினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வி அனிதா. நீட் தேர்வினை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடிய மாணவி கடந்த மாதம் செப்., 1-ஆம் நாள் அவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இன்று அவரது குடும்பத்திற்கு, முதலவரின் பொது நிவாரண நிதியிலிருந்து 7 இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும், அவருடைய குடும்பத்தைச் சார்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் கடந்த 1.9.2017 அன்று அறிவித்தார். அந்த அறிவிப்புக்கிணங்க, முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், செல்வி அனிதாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் நிதி உதவியாக 7 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று அவரது தந்தை திரு.சண்முகத்திடம் வழங்கினார்கள். மேலும், அவரது சகோதரர் திரு.ச. சதிஷ்குமாருக்கு சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ்இயங்கும் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தில் இளநிலை உதவியாளராக பணியமர்த்தம் செய்து, அதற்கான பணிநியமன ஆணையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திரு. சதிஷ்குமாரிடம் வழங்கினார்கள். 


இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (பொறுப்பு) திரு. மோகன் பியாரே, இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் டாக்டர் உமாநாத், இ.ஆ.ப., உடையார்பாளையம் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி பி. டினாகுமாரி, தமிழ்நாடு மூலிகை பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தின் பொது மேலாளர் திருமதி எம். இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.