கர்ணனை பாரதத்தில் கண்டோம். சில ‘கர்ணன்’கள் நம் கலியுகத்திலும் தோன்றியுள்ளனர். வலது கை கொடுப்பது இடது கைக்கும் தெரியாமல் அள்ளிக் கொடுக்கும் கொடை வள்ளல்களில் எச். வசந்தகுமாரின் பெயர் கண்டிப்பாக எடுக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எச். வசந்தகுமார் (H. Vasanthakumar) தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் வீட்டு உபயோகப் பொருள் அங்காடியான வசந்த் அன் கோவின் நிறுவனத் தலைவராகவும், செயற்கைக்கோள் தொலைக்காட்சியான வசந்த் தொலைக்காட்சியின் (Vasanth TV) நிறுவனத் தலைவராகவும் இருந்தார். இவர் பதினேழாவது மக்களவை உறுப்பினராகவும், தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.


அரசியல் வாழ்க்கை:-


வசந்தகுமார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முதன்மை தலைவர்களில் ஒருவராவார். இவர் நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இறப்பு:-


கொரோனா பரிசோதனை செய்தபோது இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவரது மனைவிக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இருவரும் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பிறகு வசந்தகுமார் உடல்நிலை சீராக இருந்த நிலையில், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆக்சிஜன் அளவு குறைந்ததால் அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆகஸ்ட் 27, 2020 அன்று வசந்தகுமாரின் உடல்நிலை மோசமடைந்தது. ஆகஸ்ட் 28, 2020 அன்று மாலை சுமார் 7 மணி அளவில் வசந்தகுமார் மரணமடைந்தார்.


ALSO READ: காங்கிரஸ் எம்.பி. ஹெச் வசந்த குமார் காலமானார்: COVID-19-ஆல் பாதிக்கப்பட்டிருந்தார்!!


வெற்றி நாயகன்:


‘வெற்றிப்படிக்கட்டு’ என்ற தலைப்பில் தனது தொலைக்காட்சியில் வசந்த குமார் அவர்கள் வழங்கியுள்ள உரைகள், பலரது வாழ்க்கையில் விளக்கேற்றியுள்ளன என கூறினால் அது மிகையாகாது. உழைப்பால் உயர்ந்தவர்களின் பட்டியலில் இவர் பலருக்கு முன்னோடியாக உள்ளார். வசந்த குமார் அவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், தன்னைப் போல் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என மிகுந்த ஆர்வம் காட்டியவர். அது அவரது ஒவ்வொரு செயலிலும் தெளிவாகத் தெரியும்.


70-களின் துவக்கத்தில் ஒரு சேல்ஸ் மேனாக தன் தொழில் வாழ்க்கையை துவக்கிய வசந்தகுமார் அவர்கள், ‘Vasanth & Co’ என்ற நுகர்வோர் பொருட்களுக்கான மிகப்பெரிய வணிக சங்கிலியைத் துவக்கினார். அது தமிழகத்தின் வர்த்தக சூழலை பெரும் அளவில் மாற்றியமைத்தது. பணக்காரர்கள் மட்டுமே அனுபவித்த பல வசதிகளை நடுத்தர குடும்பத்தினரும், ஏழைகளும் வாங்கி உபயோகிக்கும் வாய்ப்பை முதன் முறையாக இந்த நிறுவனம் அளித்தது என்றே கூறலாம்.


இந்தத் தொழிலை துவக்கிய புதிதில், வசந்தகுமார், சைக்கிளில் பல இடங்களுக்குச் சென்று தன் பொருட்கள் மற்றும் கடைகளைப் பற்றி விளம்பரம் செய்வார். தன் கையை மட்டுமே நம்பி செயல்பட்ட அவர் என்றும் தன்னுடன் சேர்ந்து தன்னுடன் உள்ள அனைவரையும் உயர்த்தும் நல்ல குணம் உள்ளவர்.


சமூக சேவகரான வசந்த குமார் அவர்கள், ஏழை மாணவர்களுக்காக பல இலவச டியூஷன் மையங்களை திறந்தார். சாலையோர கடைகள் வைத்திருப்பவர்களுக்காகவும் ஏழைகளுக்காகவும், வட்டியற்ற இலவச கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.


அரசியலில் இருந்தாலும், அப்பழுக்கற்றவராய், செல்வந்தனாக இருந்தாலும் பழக சுலபமானவராய், முதலாளியாக இருந்தாலும் அயராத உழைப்பாளியாய் வாழ்ந்த வசந்தகுமார் அவர்களின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு பாடம்!!