வங்கக் கடலில் உருவான பானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்க கடலில் உருவான ஃபானி புயல், மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த ஃபானி புயல், அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக மாறும் என்றும் தெரிவித்துள்ளது. 


தென்கிழக்கு வங்க கடலில் வெள்ளிக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று புயலாக உருவெடுத்தது. வங்க கடலில் உருவாகியுள்ள போனி புயல், சென்னையிலிருந்து தென்கிழக்கே, ஆயிரத்து 50 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக, இந்திய வானிலை ஆய்வு மையம், காலை 8.30 மணியளவில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஃபானி புயல், கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,  சென்னை வானிலை மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்; மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.


பானி புயல் தமிழகத்தில் கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை. இதனால் தமிழகத்திற்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை. வடமேற்கு திசையில் நகர்ந்து 30-ம் தேதி வடதமிழகத்தின் தெற்கு ஆந்திரா கடற்பகுதியில் 300 கி.மீ. தொலைவில் நகரும். பானி புயல் கரையை நெருங்கி வரும் நேரத்தில் வட தமிழகம், சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.