சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை புயலாக உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தென் கிழக்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகே சில நாட்களுக்கு முன் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது. இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி அது மேலும் வலுவடைந்தது. தற்போது புயலாக மாறியுள்ளது. இதற்க்கு ‘நடா’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது.


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது.  இதனால், நாளை காலை முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். இது படிப்படியாக அதிகரித்து உள்மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.


இந்த புயல் சின்னத்தால் டிசம்பர் 2ம் தேதி முதல் அனேக இடங்களில் பெரும் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும் என்றார்.


2-ம் தேதி முதல் மழை அளவு மேலும் அதிகரிக்கும். அப்போது தமிழ்நாடு மற்றும் புதுவை முழுவதும் பலத்த மழை பெய்யும். 


இது தென்மேற்கு வங்கக் கடலில் புதுச்சேரிக்கு 75 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 830 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.


புயல் கரையை கடக்கும் போது பலத்த காற்றுடன் மழை கொட்டும். இதன் காரணமாக பாதிப்புகள் அதிகம் ஏற்படும். தமிழக கடலோர மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும்.


அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் துவங்கி உட்புற மாவட்டங்களுக்கு மழை நகரும். மேலும் கடல் அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும். எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.