தங்கள் கட்சியின் வெற்றிக்காக மு.க. அழகிரியை சந்தித்து ஆதரவு கோரவுள்ளதாக திமுக வேட்பாளர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக கூட்டணி சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்கள் தங்கள் கூட்டணியின் வெற்றிக்காக மு.க. அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.


இன்று மேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்., மாநிலத்திலேயே மதுரை மாவட்டம் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இதனை மாற்ற பாடுபடுவேன்.


அதேபோல் மேலூர் பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ள நிலையில் தற்போது விவசாயம் மிகவும் பாதித்துள்ளது. இதனை மாற்றி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் வெற்றி பெற்றவுடன் பாடுபடுவேன் என தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர் இரண்டொரு நாட்களில் கட்சியின் வெற்றிக்காக மு.க. அழகிரியை சந்திக்க உள்ளதாவும், அழகிரி மட்டுமல்லாமல் மதுரை பாராளுமன்ற தொகுதியிலுள்ள 15 லட்சம் வாக்காளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. அழகிரி அவர்கள்., எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் நிலைபாடு குறித்து இரண்டு வாரங்களில் தெரிவிப்பேன் எனவும், திமுக வேட்பாளர் தன்னிடம் ஆதரவு கோருவது தவறில்லை எனவும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.