சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் இன்று ஓ. பன்னீர்செல்வதிற்கு நேரடியாக சென்று ஆதரவு தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் சசிகலாவை நிராகரியுங்கள் என்று கோரிக்கை வைத்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் கூறினார். ஒ. பன்னீர்செல்வத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. 


சசிகலாவுக்கு எதிரான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை ஏற்பதாக அறிவித்துள்ளனர். 


அதிமுகவின் பொருளாளரான ஓ. பன்னீர்செல்வம் அந்த கட்சியின் வங்கி கணக்குகளை முடக்க உத்தரவிட்டிருக்கிறார். அத்துடன் சசிகலா இடைக்கால பொதுச்செயலர் என்பதால் பொதுச்செயலர் பதவியும் காலியாகவே இருக்கிறது எனவும் பகிரங்கமாக அறிவித்தார். 


இந்நிலையில் அதிமுக அவைத் தலைவரான மதுசூதனன் திடீரென சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு வருகை தந்து தமது ஆதரவையும் தெரிவித்திருக்கிறார். 


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன்:-


கயவர்களிடம் கட்சி சிக்கிக்கொண்டுள்ளது. அதை சகிக்க முடியாமல்தான் ஓ.பன்னீர் செல்வத்திடம் சரணடைந்தேன். அதிமுக தொண்டர்களும், மக்களும் சசிகலாவை நிராகரிக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. அதிமுகவிற்கு ஓ. பன்னீர்செல்வம் தலைமை ஏற்க வேண்டும். பிப்ரவரி 7-ம் தேதி முதல் மிகப்பெரிய மக்கள் புரட்சி தொடங்கப்பட்டுள்ளது. 


இவ்வாறு பேசினார்.