தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்வதன் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. நகர்ப்புறங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில்; தென்மேற்கு வங்க கடல் - தென்தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி, விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, பம்மல், ஆவடி, அம்பத்தூர், பாடி, அயனாவரம், எழும்பூர், முகப்பேர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் விடிய விடிய கனமழை கொட்டியது.


மேலும்  கோவை, கன்னியாகுமரியில் கனமழை பெய்வதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேப்போல் சிவகங்கை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில், கனமழையை அடுத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. என்றபோதிலும் மற்ற மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.