தமிழகத்தின் 20 தொகுதிகளிலும் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்,  மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக சத்யநாராயணன் நியமிக்கப்பட்டார்.


இதையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து விசாரணையை தொடங்கினார். மேலும் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் .


இதையடுத்து இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கினார். அப்போது, 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்றும் தகுதிநீக்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். 


அப்போது பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் இறைவன் அருளால் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே, அதிமுக இடைத்தேர்தலை சந்திக்க தயாராக இருந்தது. காலியாக உள்ள 20 தொகுதிகளில், எப்போது தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். தேர்தல் ஆணையம் எப்போது தேர்தல் நடத்தினாலும் அதிமுக நிச்சயம் அதில் வெற்றி பெறும்.


தினகரன் தரப்பு மேல்முறையீடு செய்தால், அது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக உள்ளது. அதே நிலை வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலிலும் நீடிக்கும்.


இவ்வாறு கூறினார்.