சென்னையில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்துக்கு வாராந்திர மற்றும் மாதாந்திர பஸ் பாஸ்  இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு கடந்த 19ஆம் தேதி பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண உயர்வு கடந்த 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, ஒரே நாளில் பேருந்து கட்டணம் மிக அதிக அளவில் உயர்த்தப்பட்டதற்கு அரசியல் கட்சிகளும், மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


போராட்டங்களும் நடத்தப்பட்டன.கடும் எதிர்ப்பை அடுத்து உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை குறைப்பதாக தமிழக அரசு அறிவித்தது. புதிய அறிவிப்பின் படி ரூ.1 குறைக்கப்பட்டது.


இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. இதற்கிடையில் ரூ.1,000 பஸ் பாசில் மாற்றமில்லை எனவும், உயர்த்தப்பட்ட கட்டணத்துடனான புதிய பஸ் பாஸ் விரைவில் வழங்கப்படும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்துடனான வாராந்திர மற்றும் மாதாந்திர பஸ் பாஸ் சென்னையில் இன்று முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.


இதன்படி, சென்னையில் வாரத்திற்கான பஸ்பாஸ் கட்டணம் ரூ.240 லிருந்து ரூ. 320 ஆக உயர்த்தப்பட்டு அட்டை விநியோகிகப்பட்டு வருகிறது.


அதேபோன்று, மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் ரூ.280 லிருந்து ரூ. 370ஆக உயர்த்தப்பட்டு அட்டை வழங்கப்பட்டு வருகிறது.


விருப்பம்போல் பயணம் செய்யும் ரூ.1000க்கான பஸ்பாஸ் எந்த விலை உயர்வும் இன்றி வழங்கப்படுகிறது. 


சென்னை தவிர மற்ற போக்குவரத்து கழகங்களிலும் புதிய கட்டணத்துடனான பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.