வேலூர்: புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்காக இன்று முதல் இலவச கல்வி, இலவச அரிசி தரமான துணி வழங்குதல் உள்ளிட்ட 10 திட்டங்கள்  செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் அருகே மேல் மொணவூர் என்ற இடத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அருகே இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


முதற்கட்டமாக ரூ142.16 கோடி மதிப்பீட்டில் 3510 புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார். மேலும் ரூபாய் 30 கோடி மதிப்பில் பல்வேறு அடிப்படை வசதிகளுக்கான அடிக்கல் நாட்டி வைத்தார். பின்னர் பொறியியல் மாணவி ஒருவருக்கு இலவச கல்விக்கான முழு கல்வி கட்டண காசோலை, மற்றும் 5 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு உயர்த்தப்பட்ட கல்வி தொகைக்கான காசோலை, 13 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதிக்கான காசோலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.


இந்த விழாவில் மொத்தமாக ரூ 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாவில் மாநில நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மாஸ்தான், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


முன்னதாக மகளிர் குழுவினர் தயாரித்த கைவினைப் பொருட்களை முதலமைச்சர் மு க. ஸ்டாலின் பார்வையிட்டார். அதன்பிறகு விழாவில் பேசிய  முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது, 


புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களாக இருந்தாலும் மொழியால் இனத்தால் பண்பால் நாகரிகத்தால் தமிழர்களோடு ஒன்று பட்டவர்கள். ஒரு தாய் மக்கள். 1983ஆம் ஆண்டு முதல் ஈழத்தில் இருந்து வந்த நாள் முதல் திமுக அவர்களுக்கு அடைக்கலமாக இருந்து வருகிறது. இலங்கை தமிழர்களுக்கு 1997 ஆம் ஆண்டு தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் அன்றைய ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் ஓரளவு அவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.


 



அதன்பிறகு கடந்த 10 ஆண்டுகளாக புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு எந்த ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை. இலங்கை அகதிகள் முகாம்கள் என அழைக்கக் கூடாது என்பதற்காக மறுவாழ்வு முகாம் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.


தமிழகத்தில் உள்ள 106 புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழருக்கான முகாம்களை ஆய்வு செய்து அதனை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் 19 ஆயிரத்து 46 குடும்பங்களுக்கு 7 ஆயிரத்து 469 வீடுகள் கட்டித் தரநடவடிக்கை எடுக்கப்பட்டு, இன்று முதல் கட்டமாக 290 சதுர அடியில் 3510 வீடுகள் கட்ட 142-16 கோடி மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் தமிழக அரசு முழுமையாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இலவசக் கல்வி மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு ஊக்கத் தொகை ஆகியவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்பங்களுக்கும் இலவசமாக அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். 


புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்காக இன்றுமுதல், 8.6 கோடி மதிப்பீட்டில் மானிய விலையில் எரிவாயு இணைப்பு திட்டம், இலவச அரிசி வழங்கும் திட்டம், இலவச கல்வி, பட்டப் படிப்புகளுக்கு உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை, ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் 5000 இளைஞர்களுக்கு  திறன் வளர்ச்சி மேம்பாட்டு பயிற்சி, ரூ621 சுய உதவிக் குழுக்களுக்கு 6.15 கோடியில் சமுதாய முதலீட்டு நிதிவழங்குதல் கோ-ஆப்டெக்ஸ் மூலம் தரமான துணிகள் வழங்குதல் உள்ளிட்ட  10 நல திட்டங்கள் செயல்படுத்தப்படும். 


இலங்கை தமிழருக்காக தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதி அளித்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR