ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று நெடுவாசல் கிராம மக்கள் சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில், அந்தத் திட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1991-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டப் பணி மத்திய அரசால் நடந்து வருகிறது. இதன் மூலம் நாட்டுக்கு வருமானம் அதிகரிப்பதோடு, இறக்குமதி செலவும் குறையும். இதற்காக ஏக்கர் கணக்கில் விவசாயிகளிடம் அரசு நிலத்தை குத்தகையாக பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கடந்த 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 


இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இத்திட்டத்தால் வேளாண் விளைநிலங்களும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். மத்திய, மாநில அரசுகளின் வாக்குறுதிகளை ஏற்று போராட்டம் நேற்று கைவிடப்பட்டது.


இந்நிலையில், இதுதொடர்பாக பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.