புதுக்கோட்டை: நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட கோரிக்கை விடுத்து மாவட்டம் முழுவதும் வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1991-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டப் பணி மத்திய அரசால் நடந்து வருகிறது. இதன் மூலம் நாட்டுக்கு வருமானம் அதிகரிப்பதோடு, இறக்குமதி செலவும் குறையும். இதற்காக ஏக்கர் கணக்கில் விவசாயிகளிடம் அரசு நிலத்தை குத்தகையாக பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கடந்த 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 


இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இத்திட்டத்தால் வேளாண் விளைநிலங்களும், விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறி அங்குள்ள மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தினால் தஙகள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும், விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்றும் கூறி அப்பகுதி மக்கள் 15-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டத்துக்கு வணிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.


மக்களின் போராட்டத்துக்கு மாணவர்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சிகள் ஆகியன ஆதரவு அளித்துள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.