வேலூர் மண்டலத்துக்குட்பட்ட நகராட்சிகளில் உடனடியாக பசுமை உரக்குடில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் மண்டலத்துக்குட்பட்ட 15 நகராட்சிகளில் உடனடியாக பசுமை உரக்குடில் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராணிப்பேட்டையில் நடைபெற்ற நகராட்சி ஆணையர்கள் ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் சி.விஜயகுமார் அறிவுறுத்தினார். 


அதன்படி வேலூர் மண்டலத்திற்குட்பட்ட வாலாஜாப்பேட்டை, ராணிப்பேட்டை , ஆற்காடு , ஆரணி, செய்யாறு, வந்தவாசி, திருவத்திபுரம், திருவண்ணாமலை, திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், திருப்பத்தூர் ஆகிய 15 நகராட்சி ஆணையர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் ராணிப்பேட்டை நகராட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் சி.விஜயகுமார் தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில்., தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின் பேரில், மாநிலம் முழுவதும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பசுமை உரக்குடில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து உரமாக மாற்றி விற்பனை செய்யப்பட உள்ளது.


அதன்படி, வேலூர் மண்டலத்துக்குள்பட்ட 15 நகராட்சிகளிலும் பசுமை உரக்குடில் திட்டத்தை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 


அதேபோல, அனைத்து நகராட்சிகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உண்டாக்க வேண்டும், மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்வோர் பட்டியல் கணக்கெடுப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து நகராட்சிகளில் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.