பெரும் சர்ச்சைகளுக்கு இடையில் இன்று தமிழகத்தில் தபால் துறை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் நடைப்பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா தபால் துறையில் உள்ள 1039 காலி பணியிடங்களுக்கான தேர்வு இன்று தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய நான்கு இடங்களில் நடைபெற்றது. தேர்வில் வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே இடம் பெறும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்ததன் படி வினாத்தாள்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் தேர்வாளர்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது.


அஞ்சல் துறையில் தபால்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்வில், தமிழகத்தில் மட்டும் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். இதற்கிடையில் இந்தி, ஆங்கில மொழி வினாத்தாள்களை கொண்டு நடத்தப்பட்ட தேர்வை எதிர்த்து, நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்வின் முடிவு வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக இந்திய தபால்துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல்தாளுக்கான தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே வினாத்தாள்கள் வழங்கப்படும் எனவும் இரண்டாம் தாளுக்கான தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலத்திலிருந்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அனைத்து தபால் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


இந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன் படி., இந்தியா முழுவதும் நடைபெறும் தபால்துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள் (Multi Tasking Staff), மெயில் குவார்ட் (Mail Guard), தபால்காரர் (Postman), அஞ்சலக உதவியாளர் (Postal Assistant), சார்டிங் அசிஸ்டெண்ட் (Sorting Assistant) போன்ற பணியிடங்களுக்கான தேர்வுகள் இதற்குமுன் அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வந்தன. 


கடந்த மே மாதம் 10-ஆம் தேதி இந்த பணிகளுக்கான தேர்வுகளின் பாடத்திட்டத்தினை மாற்றியமைத்து இந்தி மற்றும் ஆங்கிலத்திலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் 23 மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் அமையும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.