சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாற்றுத்திறனாளிகள்  அனைத்து உரிமைகளையும் பெற்று, வாழ்வில் ஏற்றம் பெற தமிழக அரசு நடைமுறைப் படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் அனைத்தையும் அறிந்து, தமிழ்நாடு அரசு ஏற்றமிகு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 


அரசின் இந்தத் திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமென  முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் நலன்களையும் காக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3-ஆம் நாள் "அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்" அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளைதெரிவித்துக் கொள்கிறேன். மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது; கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல்; மாற்றுத் திறனாளிகளுக்கு பேருந்துப் பயணச் சலுகை; குடும்பத்தில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால் அந்தக் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பின்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்; பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள்; மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள்; மன வளர்ச்சி குன்றியவர்கள் மாத ஓய்வூதியம் பெறுவதற்கான பாதிப்பு சதவிகிதம் 45 சதவிகிதமாக குறைப்பு; கடுமையாக பாதிக்கப்பட்ட/மன வளர்ச்சி குன்றிய/ தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டமாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தியது.


இந்தியாவிலேயே முதன்முறையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரப் பணிக்கு முழு நாள் ஊதியம் வழங்குதல். பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித வீடுகள் ஒதுக்கீடு; மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வயது 18-ஆக குறைப்பு; மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளின் குறைபாட்டினைக் கண்டறிந்து சிறப்பு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலமாகத் தகுந்த சிகிச்சை அளிக்கவும், தேவையான உபகரணங்கள், சான்றிதழ்கள், உதவித் தொகை, போன்றவற்றை வழங்குவதற்கும், அவர்களுடைய வாழ்க்கையை சிறப்புற அமைத்துக் கொள்ள தக்க ஆலோசனைகளை வழங்குவற்கும் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் மாநில ஆதார வள மையம் நிறுவியது, போக்குவரத்து நெரிசல்மிக்க இடங்களில் பார்வை குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாக சாலையினை கடப்பதற்கு ஏதுவாக சென்னையில் 150 இடங்களில் போக்குவரத்து சாலை சந்திப்புகளில் குரல் ஒலிப்பான் சமிக்ஞைகள் நிறுவியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


இந்த அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தில், மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் அனைத்தையும் அறிந்து, அவர்கள் மன நிறைவோடு வாழ்ந்திட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ஏற்றமிகு திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில்பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.