தமிழக சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் தொழில் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார் செல்வி ஜெயலலிதா. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அவர் கூறியதாவது:- அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள் தான். அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அரசு ஊழியர்கள் தான். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.


பெண் ஊழியர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு 2011-ஆம் ஆண்டு ஆட்சி எனது ஆட்சியில் அரசுப் பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தினை 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன்.


தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை நாங்கள் அளித்திருந்தோம். அதனை செயலாக்கும் விதத்தில் அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணி பாதுகாக்கும் வகையில் பேறு கால சலுகையாக வழங்கப்படும் 6 மாத கால மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அறிவிப்பை வெளியிட்டார்.