காலை 9 மணி வரையில் பதிவான வாக்கு சதவிகிதம்:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவண்ணாமலை - 7.58%
ஆரணி - 8.75%
தேனி- 7.94%
வடசென்னை- 4.58%
தென்சென்னை- 5.67%
மத்திய சென்னை- 3.71%
பெரம்பூர்- 4.41%
ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு சதவீதம் - 7.91%
ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம் - 9%
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு சதவிதம்- 11.57%
பரமக்குடி சட்டமன்றத் தொகுதி- 8.13%
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி-15.28 %


தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 


பாராளுமன்றத்துக்கு 2வது கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை முதல் தொடங்கியது. 


தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.


மீதமுள்ள தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.


இந்த தேர்தலில் அதிமுக தலைமையில் ஓர் அணியும், திமுக  தலைமையில் மற்றொரு அணியும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ளன.


தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். 


இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும். சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை பாராளுமன்ற தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.


காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு முதல் 2 மணி நேர இடைவெளியில் பதிவான வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டு ‘சீல்’ செய்யப்படும். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.


மே 19ம் தேதி, தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அன்றுடன் முடிவடைகிறது. மே மாதம் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.


சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலியுடன் வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல், நடிகர் ரஜினிகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார். அதேபோல், நடிகர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார். புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள  பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில்  முதலமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் எடப்பாடி தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.  நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 


மேலும் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன் கோபி அருகே குள்ளம்பாளையத்திலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைஞாயிறு அருகே உள்ள ஓரடியம்புரத்திலும் வாக்களித்தனர். ஆரணி அருகே உள்ள சேவூரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்களித்தார். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது தாயார் நளினி சிதம்பரம் மற்றும் மனைவி ஸ்ரீநிதியுடன்  காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக ப.சிதம்பரம் தனியாக வந்து தனது வாக்கை பதிவு செய்தார். தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். 


இந்நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. சென்னை அண்ணா நகர் மேற்கு பகுதியில் உள்ள ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் வேலை செய்யாததால் தாமதம் ஏற்பட்டது. மேலும் நெல்லை கோடீஸ்வரன் நகர், நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளி, ஒட்டன்சத்திரம், காட்பாடி எல்ஜிபுதூர், திருப்பூர் அரண்மனைபுதூர், பெரியகுளம் செவன்த் டே பள்ளி, நாகையில் உள்ள 151வது பூத், கோவை சித்தாபுதூர் ஆகிய இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. பொள்ளாச்சி கோட்டூர் சாலை பெண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்டுகள் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டதால் வாக்குப்பதிவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.