மெரினாவில் போராட்டம் நடத்த தனி நீதிபதி அளித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரினாவில் 90 நாட்கள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, சென்னை மெரினா கடற்கரையில் காவிரி பிரச்சனைக்காக ஒருநாள் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார்.


இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, தொடர்ந்து வழக்கை விசாரித்தனர்.


இந்த வழக்கை தொடர்ந்து விசாரணை செய்த தனி நீதிபதி ராஜா, "ஒரு மாதக்காலத்திற்கு அனுமதி அளிக்க முடியாது. ஒருநாள் போராட்டம் நடத்தலாம். ஆனால் சட்ட ஒழுங்கை கெடுக்காமல், அரை நிர்வாணம் போன்றவற்றை செய்யாமல் போராட்டம் நடத்த வேண்டும்" என்றார். 


நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அதனை அவசர வழக்காக விசாரித்த நீதிபதி சுதர்சன் தலைமையிலான அமர்வு, அன்று மாலையே நீதிபதி ராஜா வழங்கிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பானது ஒத்திவைக்கப்பட்டது. 


இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், போராட்டம் நடத்த மெரினா அருகிலேயே பல இடங்கள் உள்ளன. மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது. போராட்டத்தால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடந்த போது, இறுதியில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டது" என்று நீதிபதிகள் கூறினர்.