தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில், மருத்துவ அதிகாரிகளுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் அரசாணைப்படி கலந்தாய்வு நடந்தால், அரசு மருத்துவர்கள் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும் என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் இந்த கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 


இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், கலந்தாய்வு தொடங்கிவிட்டதால் தடை விதிக்க மறுத்து விட்டார். அதே நேரத்தில் கலந்தாய்வு முடிவுகளை வெளியிடக்கூடாது எனவும் உத்தரவு பிரப்பித்துள்ளார்.


இந்த மனு தொடர்பாக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவக் கல்லூரி தேர்வுக்குழு செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டு வழக்கின் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.


முன்னதாக வரும் கல்வி ஆண்டில் மருத்துவக் கலந்தாய்வை ஆன்லைன் மூலம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்திருந்தார்.


தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்தமுள்ள 1,761 இடங்களில் 50% இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடாகும். மீதமுள்ள 912 இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கலந்தாய்வு ஆனது வரும் 4-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.