சென்னையில் சாலையோரம் துணி இல்லாமல் இருந்த முதியவருக்கு புது லுங்கி கொடுத்து, வேறு உதவி எதுவும் வேண்டுமா என கேட்கும் போக்குவரத்து தலைமை காவலர் ஒருவரை காரில் சென்றவர் வீடியோ எடுத்து பாராட்டி சமூக வளைத்தளங்களில் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில மாதங்களுக்கு முன் தரமணியில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களால் தரக்குறைவாக பேசி தாக்கப்பட்ட மணிகண்டன் என்கிற கால்டாக்ஸி ஓட்டுநர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது தமிழகம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. 


அதேபோல் காமராஜ் என்கிற போக்குவரத்து ஆய்வாளர் இருசக்கர வாகனத்தில் சென்றவரை எட்டி உதைத்ததில் உஷா என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்.


இந்த சம்பவங்கள் ஒருபுறம் இருக்க சென்னை மயிலாப்பூர் லஸ்கார்னரில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் ஒருவர் சாலையோரம் துணி இல்லாமல் அமர்ந்திருந்த பெரியவரின் நிலையை பார்த்து உடனடியாக அந்த பெரியவருக்கு புதிய லுங்கி வாங்கி அதை அணியவைத்து அவரை தூக்கி அமரவைத்து அவரிடம் குறைகளை கேட்டுக்கொண்டிருந்தார். 


இதை அங்கிருந்து ஒருவர் வீடியோ எடுத்து, சென்னை லஸ்கார்னரில் தலைமை காவலர் ஒருவர் முதியவருக்கு புது லுங்கி கொடுத்து, வேறு உதவி எதுவும் வேண்டுமா என்று கேட்கிறார். மனிதாபிமானமிக்க இந்த காவலரின் பணி போற்றத்தக்கது என்று வீடியோ போட்டுள்ளார். 


இது தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரித்தபோது மயிலாப்பூர் காவல் நிலைய போக்குவரத்து காவல் தலைமை காவலர் அந்தோணி பிராங்க்ளின் என்பது தெரியவந்துள்ளது.