இலங்கையில் இன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டனர்.


இந்நிலையில், கொழும்பு நகரிலுள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 3 ஓட்டல்கள் ஆகியவற்றில் இன்று காலை திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இந்த சம்பவத்தில் 160-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் அதிகமானோா் காயமடைந்து உள்ளனர்.


இதில், கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் என 3 கிறிஸ்தவ ஆலயங்கள் சேதமடைந்துள்ளன. அதேபோன்று ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 ஓட்டல்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.  மேலும் 2 இடங்களில் பிற்பகலில் குண்டுகள் வெடிப்பு நிகழ்ந்தது.


உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல் தொடர்பாக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...



"இலங்கையில் குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மனித கருத்து வேறுபாடுகளுக்கு வன்முறை ஒருபோதும் இறுதி தீர்வாகாது. பாரபட்சமின்றி நீதி கிடைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.