கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையில்லை என்றும், அவருக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும்,  வெற்றிவேல், தங்கத்தமிழ் செல்வன் உள்ளிட்ட தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் அப்போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்விடம் கடிதம் அளித்தனர். அதன்பின்னர் 2017 செப்டம்பர் மாதம் கட்சித் தாவல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சட்டமன்ற சபாநாயகர் பி.தனபால் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து சபாநாயகரின் நடவடிக்கைக்கு எதிராக 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்ந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் விசாரனைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் மூன்றாவது நீதிபதியாக சத்ய நாராயணன் நியமிக்கப்பட்டு, இந்த வழக்கு விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டது. விசாரணை நடத்தி வந்த நீதிபதி வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.


இந்நிலையில், இன்று இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என நீதிபதி சத்ய நாராயணன் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பால் அதிமுக அரசு சட்டபேரவையில் பெரும்பான்மை இருப்பது உறுதியாகியுள்ளது. 


ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செய்யாமல் இருந்தாலோ அல்லது மேல்முறையீடு செய்தும் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டாலோ, 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகள், ஏற்கனவே காலியாகி விடும். ஏற்கனவே தமிழகத்தில் 2 தொகுதிகள் காலியாக உள்ளது. எனவே மொத்தம் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இதில் ஆளுங்கட்சியான அதிமுக அரசு தோல்வியடையும் பட்சத்தில் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு பெரும்பான்மையை இழக்க நேரிடும், ஆட்சி பறிபோகும். 


20 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் என்பது ,குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், இதுக்குறித்து கருத்து தெரிவித்த முன்னால் அமைச்சர் பா.சிதம்பரம், தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்றைய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியாது. 18+2 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவதை விட, முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும்" என பதிவிட்டுள்ளார்.