சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில தினங்களாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரை காண 15 நாட்கள் பரோல் வேண்டும் என சசிகலா முன்னதா மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவில் குளறுபடி இருந்ததால் சிறை நிர்வாகம் அதனை தள்ளுபடி செய்தது. 


அதன் பிறகு மீண்டும் அவர் பரோல் கேட்டு சரியான விளக்கங்களுடன் மனு தாக்கல் செய்யப்பட்டது. சசிகலா பரோல் மனுவினை அடுத்து கர்நாடக சிறை நிர்வாகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது. அதில், சசிகலா பரோலில் விடிவிக்கப்பட்டால், அவரின் பாதுகாப்பு மற்றும் அவர் தங்குமிடம் குறித்தும், சட்ட ஒழுங்கு குறித்தும் கேட்டு கடிதம் அனுப்பியது.


அவரது பரோல் மனுவை ஏற்ற சிறைத்துறை சசிகலாவை ஐந்து நாள் பரோலில் செல்ல அனுமதி வழங்கியது. மேலும், தனது பரோல் காலத்தில் அரசியல் நிகழ்வுகளில் ஈடுபடக்கூடாது என்பன உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. 


அக்டோபர் 6-ம் தேதி பரோலில் வெளியே வந்த சசிகலா, தனது கணவர் நடராஜனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், சசிகலாவின் 5 நாள் பரோல் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, நாளை மாலை 5 மணிக்குள் மீண்டும் சிறைக்குள் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.