மதுரையில் நாளை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் செயல்படும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்று தென்னிந்தியாவில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்தது. அந்தவகையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது.


இதற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு, ரூ.1,264 கோடி நிதியும் ஒதுக்கி உள்ளது. இதனைத்தொடர்ந்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிகள் தொடங்கின. இந்த மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நாளை நடக்கிறது.


இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் இந்த விழாவில் தமிழக கவர்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.


இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் நாளை காலை டெல்லியில் இருந்து புறப்படுகிறார். அதன் பின்னர் அரசு விழா நடைபெறும் இடத்தின் அருகே நடைபெறும் பாஜக மண்டல மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.


பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நிகழ்ச்சி முடியும் வரை அந்தப்பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.