சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவும், தமிழக முதல் அமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் பொறுப்பேற்றுக் கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று பிற்பகல் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் நடக்கிறது. 2-வது முறையாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.


கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி சசிகலா ஆலோசனை நடத்தினார். இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தற்போது 2-வது முறையாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.


இதில் கட்சிப்பணிகள் மற்றும் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்த கூட்டத்தில், புதிய முதல் அமைச்சராக சசிகலா தேர்வாக வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


ஓ.பன்னீர்செல்வம் திடீர் என்று இன்று போயஸ் கார்டன் சென்றார். அங்கு பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.