விருதுநகரில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கருப்புக் காந்தி, இந்திய அரசியலின் கிங் மேக்கர் என்று வர்ணிக்கப்பட்ட கர்மவீரர் காமராஜரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கல்விக் கண் திறந்த அந்த மாபெரும் தலைவர் காமராசர். கரம்பை மண்ணும், கரிசல் காடும், கரிச்சான் குருவிகளும் கொண்ட தென் தமிழகத்தின் அன்றைய காலத்தில் அதிகம் அறியப்படாத விருதுபட்டியில் பிறந்த காமராசர் முதலமைச்சராக வலம் வந்தவர். 


இந்நிலையில், விருதுநகரில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடியில் பெருந்தலைவர் காமராஜர் நினைவாக, காமராஜர் கல்வி, மருத்துவ அறக்கட்டளை அறங்காவலரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தலைமையில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளையொட்டி இந்த மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிச்சாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். 


மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடியில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம், 12 ஏக்கர் பரப்பளவில் 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓ.பன்னீர் செல்வம், ராதிகா சரத்குமார், வரலட்சுமி சரத்குமார்  மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அதேபோன்று விருதுநகரில் சமக தலைவர் சரத்குமார், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திர ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


இந்த மணிமண்டபத்தில் அறிவியல் பூங்கா, காமராஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் மாதிரி நினைவு இல்லம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.