மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அவர்களின் அஸ்தியை கன்னியாகுமாரி கடலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கரைத்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறைந்த முன்னாள் பிரதமர் மற்றும் பாரத்திய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அட்டல் பிஹாரி வாஜ்பாயி அவர்கள் கடந்த ஆகஸ்ட்., 16-ஆம் நாள் உடல்நல குறைவால் டெல்லி AIIMS மருத்துவமனையில் காலமானார்.


வாஜ்பாயி அவர்களின் மறைவினை அடுத்து நாடு முழுவதும் 7 நாள் துக்கம் அனுசரிக்கபட்டுள்ளது. மறைந்த பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களுக்கு தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, ஆகஸ்ட் 17 ஆம் தேதி மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. 


இதையடுத்து, அவருடைய அஸ்தியை கரைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கையாற்றில் வாஜ்பாயின் அஸ்தியை கடந்த 19-ஆம் தேதி கரைத்தனர். இதனையடுத்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பகுதியில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்க திட்டமிடப்பட்டது.
 
அதன்படி வாஜ்பாயின் அஸ்தி கலசங்களை வழங்கும் நிகழ்வு கடந்த ஆகஸ்ட் 22-ஆம் நாள் டெல்லி பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா அஸ்தியை வழங்கினர். 29 மாநிலத் தலைவர்களும், 9 யூனியன் பிரதேச தலைவர்களும் அஸ்தியை பெற்றுக்கொண்டனர். 



இந்நிலையில் வாஜ்பாயின் அஸ்தியை தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கவும், அங்கு பொதுமக்கள், பா.ஜ.க தொண்டர்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. 


இந்நிலையில் இன்று கன்னியாகுமாரி கடலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள், வாஜ்பாயி அவர்களின் அஸ்தியினை கரைத்தார். முன்னதாக தமிழக BJP தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சென்னை பெஸன்ட் நகர் கடற்கரையில் வாஜ்பாயி அவர்களின் அஸ்தியினை கரைத்தார்.