சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பி.புகழேந்தி நியமிக்கப்படுவதாக மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 75 பணியிடங்களில் தற்போது நீதிபதிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றி வரும் பி.புகழேந்தி அவர்களை சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


விருதுநகர் மாவட்டம் மேல ஆமத்தூர் பகுதியை செர்ந்த பி.புகழேந்தி அவர்களின் தந்தை பாலகிருஷ்ணன் வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயபாரதி கூட்டுறவுத்துறையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். 


புதுச்சேரி அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், தூத்துக்குடி மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனின் ஜூனியராக பணியாற்றிய அனுபவத்துடன் சிவில், கிரிமினல், ரிட் வழக்குகள், வங்கி தொடர்பான வழக்குகளில் புலமை பெற்றவர். 


கடந்த 2011-ல் சிறப்பு அரசு ப்ளீடராகவும், 2016-ஆம் ஆண்டு முதல் மதுரை உயர் நீதிமன்ற கிளையி்ன் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் விரைவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.