தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-


தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருகிறது. 


தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக திருவாடானையில் 5 செ.மீ., திருமயம், அவினாசி, நடுவட்டம், தொண்டியில் தலா 3 செ.மீ., அதிராமபட்டினம், ஊட்டி, காங்கேயம், கரம்பக்குடி, ஆலங்குடியில் தலா 2 செ.மீ., திருப்பூர், கே.பாலம், கோத்தகிரி, கோவை தெற்கு ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.


வங்க கடலில் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை ஒட்டியுள்ள தெற்கு ஒரிசா கடல்பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சம் 35 டிகிரி செல்சியசும், குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியசும் வெப்பம் இருக்கும்.


இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.