ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரிய நளினி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை முன்கூட்டியே விடுவிக்க கோரிய மனுவிற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 


ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள ஏழு பேரை விடுவிக்க கோரி, கடந்த பிப்ரவரியில் அரசுக்கு நளினி மனு அனுப்பினார். அந்த மனுவை பரிசீலித்து, தங்களை முன்கூட்டி விடுதலை செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அமர்வில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையின் போது, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை அனுப்பிய தீர்மானத்தின் நிலை குறித்து ஆளுநரிடம் தமிழக அரசு கேட்டறிய வேண்டும் என நளினி தரப்பில் வாதிடப்பட்டது.


தமிழக அரசு அனுப்பிய தீர்மானத்தின் மீதான நடவடிக்கை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என்றும் 7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரின் பரீசிலனையில் உள்ளதாகவும் அரசுதரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.