தமிழக டாஸ்மாக் கடைகள் மூலம் 2017-18 ஆம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு 26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் சுமார் 5000 டாஸ்மாக் கடைகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் மற்ற துறைகளில் கிடைக்கு வருமானத்தை விடவும் அதிகமானது ஆகும். 


சாதாரண நாட்களில் டாஸ்மாக் மூலம் சராசரியாக 70 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. அதேப்போல் பண்டிகை நாட்களில் 100 கோடி அல்லது அதற்கும் அதிகமாக வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது தமிழக டாஸ்மாக் கடைகள் மூலம் 2017-18 ஆம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு 26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் 35-வது ஆண்டறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக தெரிகிறது.


தமிழக அரசுக்கு டாஸ்மாக் லாபகரமான ஒரு விஷயமாக இருந்தாலும், டாஸ்மாக் கடைகளால் மக்கள் வாழ்க்கை பெரிதும் சீரழிந்து இளைஞர்கள் தவறானப் பாதையில் செல்வதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி போராடி வருகின்றனர். ஆனால் அரசு அவர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொண்டாமல் மதுவிலக்கு என்பதை தேர்தல் வாக்குறுதியாக மட்டுமேப் பயன்படுத்தி வருகிறது.


இதற்கிடையில் டாஸ்மாக் கடைகளை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக, தற்போது 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 


கடைக்கு 2 கண்காணிப்பு கேமரா வீதம் 3,000 கடைகளுக்கு 6,000 கேமராக்களைப் பொருத்த 5 கோடி மதிப்பிலான டெண்ரினை டாஸ்மாக் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.