காமராஜர் சாலையில் இருந்த நடிகர் சிவாஜி சிலை கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி அகற்றப்பட்டது. மேலும் அகற்றப்பட்ட அந்த சிலை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மெரினா கடற்கரை எதிரில் நடிகர் சிவாஜி கணேசனின் முழு உருவச் சிலை காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் சிலையை அகற்றும்படி கோர்ட் தீர்ப்பளித்தது. 


இதனையடுத்து அகற்றப்படும் சிவாஜி சிலை, அடையாறு அருகே கட்டப்படும் சிவாஜி மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில் நடிகர் சிவாஜி சிலை காமராஜர் சாலையில் இருந்த அகறறி அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது.


நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் வரும் அக்டோபர் 1-ம் தேதி திறக்கப்படும் என அரசுத் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே தமிழக அரசு அமைத்துள்ளது. சுமார் 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பல கோடி ரூபாய் செலவில் இந்த மணி மண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் வரும் அக்டோபர் 1-ம் தேதியன்று சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த நாள் வருகிறது. அந்த தினத்தில் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபத்தை திறந்து வைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.