சென்னை: சில மாதங்களாகவே சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொடூரக்கொலைகள் நடைபெற்றது. இதில் குறிப்பிட்ட சில கொலைகளை தவிர்த்து பல கொலைகள் ரவுடி கும்பல்களின் பழிக்கு பழி, முன்விரோதம் மற்றும் அதிகார போட்டிகளுக்காக நிகழ்த்தப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிகழ்வுகளை அடுத்து தமிழக டிஜிபி சைலேந்தரபாபு பெருநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் ஆகியோருக்கு ரவுடிகளை ஒடுக்க உதரவிட்டத்தின் பேரில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் 2 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்ட போலீசார் சுமார் 2500 க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்து அவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகளும் 934 கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும்,  குற்றச்செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 



இதன் தொடர்ச்சியாக செங்குன்றம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் செங்குன்றம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோணிமேடு சந்திப்பில் கண்காணிப்பு பணியிலிருந்த போது அங்கு இருசக்கர வாகனங்களுடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 6 நபர்களை பிடித்து விசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் கூறி இருக்கின்றனர். 


இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இருசக்கர வாகனங்களை சோதனை செய்த போலீசார் அதில் நாட்டு வெடிகுண்டுகள், துப்பாக்கி மற்றும் கத்திகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து 6 நபர்களையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் பிடிப்பட்ட நபர்கள் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த சேது (எ) சேதுபதி (வயது 32) , விஜய் (எ) தளபதி விஜய் (26) பாலகிருஷ்ணன்(24), விக்னேஷ் (எ) விக்கி (24), தமிழரசன் (எ) வெள்ளை சரவணன் (24) என்பது தெரியவந்தது.



அவர்களிடமிருந்து 1 துப்பாக்கி, 3 தோட்டாக்கள், 3 நாட்டு வெடிகுண்டுகள், 3 கத்திகள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல், மேலும் விசாரணையில் மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் சேது (எ) சேதுபதி, விஜய் (எ) தளபதி விஜய் மற்றும் தமிழரசன் (எ) வெள்ளை ஆகிய மூவரும் சேர்ந்து கடந்த 15.10.2021 அன்று செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை கடத்தி ரூ. 20 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். 


பின்னர் அந்த பணத்தை வைத்து நாட்டு வெடிகுண்டு தயாரித்துள்ளனர். பின்னர் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு, வியாசர்பாடி பகுதியில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி பழனியின் நினைவு நாளுக்கு வரும் முத்து சரவணன் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டு கொலைசெய்யும் நோக்கோடு ஆயுதங்களுடன் சுற்றிதித்தவர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.



கைது செய்யப்பட்ட 6 பேரும் பொன்னேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர் செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 


தமிழகத்தின் கடந்த சில ஆண்டுகளாக ரவுடிகளின் கைதின் போது துப்பாக்கிகள் பறிமுதல் செய்வது என்பது வாடிக்கை ஆகிப்போனது. தமிழகத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களின் கைகளில் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் பரவி இருக்கின்றது இது மிகவும் ஆபத்து எனவும் இதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR