பொங்கல் பண்டிகைக்காக நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன.சென்னையில் இருந்து வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தர்மபுரி, ஆரணி, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்காக, பூந்தமல்லியில் இருந்து தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களை காட்டிலும் நேற்று சற்று அதிகமாக அரசு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன


கடந்த 8 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் இன்று காலை முதல் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.


ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அரசு உடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தொழிற்சங்கங்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து அரசு பஸ்கள் இன்று அதிகாலை முதல் வழக்கம் போல் இயங்க துவங்கியது.


இதையடுத்து, தமிழகம் முழுவதும் இயல்பு நிலை திரும்பி வருகிறது என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இன்று காலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டு உள்ளது.


போராட்டம் காரணமாக கடந்த 2 நாட்களாக டிக்கெட் முன்பதிவு மையம் வெறிச்சோடி இருந்ததால் சிறப்பு பஸ் இயக்கப்படாமல் போய்விடுமோ என்ற எதிர்பார்ப்பில் பயணிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில் பயணிகளின் தேவைக்கேற்ப சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்தது.


பயணிகளுக்கு உதவுவதற்காக ஆங்காங்கே போக்குவரத்துத்துறை சார்பில் தகவல் மையம் அமைக்கப்பட்டு உள்ளன. எந்த நடைமேடையில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கு பஸ்கள் செல்லும் என ராட்சத பலகை மூலம் தெரியப்படுத்தப்பட்டன. மேலும் சில இடங்களில் போலீசார் சார்பில் உதவி மையங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.


சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் மாநகர பஸ்களின் எண்ணிக்கையும் ஓரளவு அதிகரிக்கப்பட்டு இருந்தன. இதனால் நேற்று வழக்கத்தை விட பயணிகள் சிரமம் ஓரளவு குறைந்தது.


ஏற்கனவே அறிவித்தபடி சென்னை கோயம்பேடு, அண்ணாநகர் மேற்கு, சைதாப்பேட்டை நீதிமன்றம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி ஆகிய 5 சிறப்பு இடங்களில் இருந்து நேற்று வெளியூர்களுக்கு ஏராளமான பஸ்கள் இயங்க தொடங்கின. முன்பதிவு செய்ய தேவையில்லை என்பதால் வழக்கமாக வருவதுபோலவே பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து அவரவர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.