கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிப்பு குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. கர்நாடக அரசின் முயற்சிக்கு உதுவும் வகையில் மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


இதற்கிடையில் மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.


இந்நிலையில் நேற்று காவிரி குறுக்கே அணை கட்டும் கர்நாடக அரசு, அனுமதி அளித்த மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


இதையட்டுத்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். கர்நாடக அரசு காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து சட்டசபையை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றியதைத் தொடர்ந்து ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு நிலையும் இன்னும் சீரடையவில்லை.


தொடர்ந்து நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி புயல் சேதத்தை நேரில் பார்வையிட வரவில்லை என்று தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி செல்கிறார். மாலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து மேகதாது விவகாரம் மற்றும் கஜா புயல் பாதிப்பு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து நேரில் விளக்கம் அளித்து ஆலோசனை நடத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.