திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணவர் சரத்பிரபுவின் உடல் டெல்லி யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் சடலமாக மீட்கப்பட்டது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவர் சரத்பிரபு மாணவனின் மரணம் தொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-


டெல்லி பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில், மருத்துவ மேற்படிப்பு (எம்.டி) படித்துக் கொண்டிருந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு மரணம் அடைந்திருக்கிறார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து துயரத்தில் வாடும் பெற்றோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். கோவை மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவக்கல்வி முடித்திருந்த சரத்பிரபுவின் இழப்பு தமிழகத்திற்கு பேரிழப்பாகும்.


“சரத்பிரபு மிகவும் அமைதியான மாணவர். கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாதவர். அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது”, என்று அவரது பெற்றோர் கூறியிருப்பதை புறக்கணித்துவிடக் கூடாது. வெளி மாநிலங்களில் கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவ, மாணவியர்க்கு எந்தவித ஆபத்துகளும் ஏற்படக்கூடாது என்றும், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது.


ஏற்கனவே, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த திருப்பூர் மாணவர் சரவணன் மர்மமான முறையில் இறந்தார் என்று முதலில் அறிவித்து, அதன் பிறகு அவர் கொலை செய்யப்பட்டார் என்று பிரேத பரிசோதனை அறிக்கை தெளிவுபடுத்திய பிறகும், அதிமுக அரசும் சி.பி.ஐ. விசாரணையை கோரவில்லை; மத்திய அரசும் சிபிஐ விசாரணைக்கு உத்தர விடவில்லை. எனவே, சரவணனின் தந்தை சிபிஐ விசாரணை கோரியும், மத்திய அரசு அதுகுறித்துக் கவலை கொள்ளாமல் மவுனம் சாதித்து வருகிறது.


அதனையடுத்து, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் மாரிராஜ் சித்திரவதைக்குள்ளாகி தற்கொலை செய்ய முயன்ற நிகழ்சினைத் தொடர்ந்து, தமிழக சட்டமன்றத்தின் ஆளுநர் உரை மீதான கூட்டத்தொடரில் எழுப்பிய நான், “வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்”, என்றும், “அதற்கு என்று தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி தமிழக மாணவர்களின் பாதுகாப்பை கண்காணித்திட வேண்டும்”. என்றும் வலியுறுத்தினேன்.


“வெளிமாநில மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்”, என்று சுகாதாரத்துறை அமைச்சர் வாக்குறுதி கொடுத்த ஒரு வாரத்திற்குள், டெல்லியில் இன்னொரு மாணவர் இறந்துள்ளார். ஏற்கனவே சரவணன் மரணம், மாரிராஜ் மீதான தாக்குதல் போன்றவற்றில் மாநில அரசு உறுதியான நடவடிக்கையை எடுத்து, உரியமுறையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தால், தற்போது டெல்லியில் இன்னொரு தமிழக மாணவர் சரத்பிரபுவின் மரணம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் மாநில அரசின் அலட்சியத்தால் தமிழக மாணவர்கள் வெளி மாநிலங்களில் உயிரிழக்கும் நிகழ்வுகள் தொடருகின்றன.


ஆகவே, அண்டை மாநிலங்களுக்கு தங்கள் பிள்ளைகளைப் படிக்க அனுப்பவே தயங்கி அஞ்சும் சூழல் பெற்றோருக்கு எழுந்துள்ளது. ஏற்கனவே, படிப்பதற்கு சென்றிருக்கும் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு என்ன கதியாகுமோ என்ற பீதி பெற்றோர்கள் மனதில் உருவாகியிருக்கிறது. தமிழக மாணவர்களின் உயிருக்கு என்ன நேர்ந்தாலும், இங்குள்ள அதிமுக அரசும் கண்டுகொள்ளாது என்ற அபாயகரமான போக்கு கவலையளிக்கிறது. 


இந்நிலையில் வெளி மாநிலங்களில் படிக்கச் செல்லும் மாணவர்கள் எல்லாம் அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி இப்போது அறிவித்திருப்பதை, பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலாகவே திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது.


இப்படிப்பட்ட காரணங்களுக்காக தமிழக அரசு காத்திருக்காமல், வெளிமாநிலத்திற்கு படிக்கச் சென்றுள்ள தமிழக மாணவர்கள் பற்றிய தகவல்களை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாக உடனடியாக சேகரித்து, அவர்களை உரியமுறையில் பாதுகாக்க அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


தலைமைச் செயலகத்தில் அதற்கென்று ஒரு தனிப்பிரிவும், தனி தொலைப்பேசி எண்ணும் (Toll Free Number) ஏற்படுத்தி, வெளிமாநிலங்களில் எப்போது தங்களுக்கு பிரச்னை ஏற்பட்டாலும், தமிழக அரசை மாணவர்கள் அவர்களது பெற்றோர் அனைவரும் எளிதில் தொடர்புகொள்ளும் வசதிகளை உருவாக்கிட முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


டெல்லியில் இதுபோன்று தமிழக மாணவர்களின் தொடர் மரணங்களை தடுக்கும் வகையில், சரவணன் மரணம், தமிழக மருத்துவ மாணவர் சரத்பிரபுவின் மரணம் ஆகியவை குறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அனைத்து மாநிலங்களிலும் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.