மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசின் AIIMS மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மதுரை தோப்பூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் AIIMS மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மொத்தம் 14 இடங்களில் புதிதாக AIIMS மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரை தோப்பூரில் AIIMS மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல்கள் வெளியானது.


மதுரையைச் சேர்ந்த ஹக்கிம் என்பவர் மத்திய அரசிடம் RTI மூலம் பல்வேறு கேள்விகள் கேட்டுள்ளார். இதற்கு மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள பதில் அறிக்கையிலை மதுரையில் AIIMS அமைய மத்திய அமைச்சரவை இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதற்காக இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டடுள்ளது.


இந்த விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...




"மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான பூர்வாங்கப்பணிகள் அனைத்தும் படிப்படியாக துறைவாரியாக மத்திய மாநில அமைச்சகங்களில் அரசாங்க நடைமுறைப்படி செய்யப்பட்டு வரும் சூழலில் இந்த மிகப்பெரிய திட்டத்திற்கான இறுதி திட்ட அறிக்கை தயாரானதுமே  நிதிஒதுக்கி அரசாணை வரும்  என்பது நடைமுறை. காங்கிரஸ் ஆட்சியில் சுதந்திரம் அடைந்தபின்னர் 60 ஆண்டுகளில் வந்தது 9 இடங்களில் மட்டுமே. ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் மோடி அவர்களின் அரசு 14 இடங்களில் எய்ம்ஸ் மாடல் மருத்துவமனைகள் புதிதாக அமைய கொள்கை முடிவு எடுத்து செயலாற்றி வருகிறது. நிச்சயம் மதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமையும் என்பது உறுதி" என பதிவிட்டுள்ளார்.