முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி நடந்த ஒரு தேர்தல் பொதுகூட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) அமைப்பை சேர்ந்த பெண் நடத்திய தற்கொலை தாக்குதலின் மூலம் முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். 


இந்த படுகொலை சம்பந்தமாக நடைபெற்ற விசாரணையின் இறுதி தீர்ப்பு 1998-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உட்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததன் மூலம் 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 


இந்த ஏழு பேரும் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு  முடிவு செய்தது. ஆனால் அவர்களை விடுதலை செய்ய மாநிலக அரசுக்கு உரிமை இல்லை, மத்திய அரசுக்கு மட்டும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது. 


இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் போது ஏழு பேரின் விடுதலை குறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு, அவர்களை விடுதலை செய்ய முடியாது. நாட்டின் பிரதமரை படுகொலை செய்தவர்களை விடுதலை செய்தால், அது சர்வதேச ரீதியாகவும், அபாயகரமான செயலுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடும். இதுகுறித்து ஏற்கனவே தமிழக அரசுக்கு தெளிவுபடுத்தப் பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது.


மத்திய அரசின் வாதங்களை ஏற்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர். இதனையடுத்து இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு கைதிகளை விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உண்டு, இவர்களின் விடுதலைக்கு தமிழக அரசிடம் ஆளுநர் பரிந்துரைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!