உபரி நீர் கடலில் கலப்பதை தடுக்க காவிரியின் குறுக்கே மேலும் 3 இடங்களில் தடுப்பணைகள கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் கே.என்.நேரு, காவிரியின் குறுக்கே போதிய தடுப்பணைகள் இல்லாமல் இருப்பது உபரி நீர் வீணாக கடலில் கலப்பதற்கு காரணமாக உள்ளது என தெரிவித்து பேசினார்.


இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீரை சேமிக்கும் வகையில் கொள்ளிடத்திலும், முக்கொம்பிலும் தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கரூர்- நாமக்கல் இடையே உள்ள காவிரி ஆற்றில் தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார்.


மேலும் காவிரி குறுக்கே மூன்று இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு ஆய்வு நடத்தி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் முதல்வர் தெரிவித்தார். இதற்காக அந்த பகுதியில் குடியிருப்புவாசிகள் பாதிக்காத வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.


மழைக்காலங்களில் எங்கு எல்லாம் மழை நீர் வீணாகிறதோ அங்கெல்லாம் கூடுதலாக தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் எனவும் முதல்வர் உறுதியளித்தார்.


பின்னர் பேசிய திமுக உறுப்பினர் நேரு, தமிழகத்தில் கால்வாய்கள், ஏரிகள் முறையாக தூர்வாரப்படவில்லை என குறிப்பிட்டு பேசினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஒவ்வொரு ஆண்டும் தூர்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது என தெரிவித்தார்.