தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பஞ்சம் மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. மிகவும் சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும், அனைத்து இடங்களிலும் மீண்டும் மழைநீர் சேகரிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன. 


சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர்.


முன்னதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதுகுறித்தி தெரிவிக்கையில்., சென்னைக்கு போதிய அளவு தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், கிராமப்புறங்களிலும் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் பருவமழை பெய்யாத காரணத்தால் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னைக்கு தீர்வாக வறட்சி நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார் அனைத்து இடங்களிலும் மீண்டும் மழைநீர் சேகரிப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.