தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 வார கால அவகாசம் கோரியுள்ளது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தலுக்காக மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில்., மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடைப்பது பற்றி இறுதி முடிவு கிடைக்கவில்லை என கூறி நான்கு வார காலம் அவகாசம் கோரியுள்ளது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்.


முன்னதாக., தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மே மாதத்தில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை அன்று, உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் 3 மாதம் அவகாசம் கோரியது.


உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட மாநில தேர்தல் ஆணையம்., வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகளும், தேர்தல் ஏற்பாடுகளும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான வேகத்தில் நடைபெறுவதாக குறிப்பிட்டு கால அவகாசம் கோரியது. இதனையடுத்து கடந்த ஜூலை 9-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனையின் போது, தண்ணீர் பிரச்சனை காரணமாகவே தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது தெரிய வந்ததாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


தண்ணீர் விநியோகம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் பணிகளில் தொய்வு அடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேலும் 60 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை முன்வைத்தது.


அதன்படி, அக்டோபர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் நான்கு வார காலம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.