தஞ்சை பெரிய கோவிலில் நாளை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்கிறது. இதனையொட்டி தஞ்சை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (புதன்கிழமை) நடக்கிறது. கடந்த மாதம் 27-ஆம் தேதி யஜமான அனுக்ஞை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து பூஜைகள் நடந்து வருகின்றன. முதல்கால யாகசாலை பூஜை கடந்த 1-ஆம் தேதி மாலையில் தொடங்கியது. 


இன்று காலை 8 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 7-ஆம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு 8-ஆம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. பின்னர் காலை 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானமும், 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் நடக்கிறது.


கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்காக தேவையான அடிப்படை வசதிகள் செய்யும் பணி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. கும்பாபிஷேகத்திற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக 21 இடங்களில் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் வசதி, கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக தினத்தன்று 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி கும்பாபிஷேகத்தை காணும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தஞ்சை பெரியகோவிலில் நாளை கும்பாபிஷேகம் கோலாகலமாக நடக்க உள்ள நிலையில் கும்பாபிஷேக விழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.