சென்னை புறநகரான நாவலூரில் உள்ள தனியார் ஐ.டி.  நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் லாவண்யா ஜனத் (வயது 30). ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இவர் பணி முடிந்து செவ்வாய் கிழமை இரவு தனியாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தாழம்பூர் - பெரும்பாக்கம் சாலையில் உள்ள அரசன்காலனி என்ற இடத்தில் அதிகாலை 2.20 மணிக்கு சென்று கொண்டு இருக்கும்போது இவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் இவரது தலையில் இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினர். இதில் அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.


பின்னர் இவரை புதருக்குள் இழுத்து சென்றவர்கள் அவர் அணிந்து இருந்த தங்க நகை, பணம் மற்றும் செல்போன் மற்றும் இருசக்கரவாகனத்தை  கொள்ளையடித்து சென்றனர். அந்த வழியே சென்ற ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை பார்த்து அதிகாலை 4 மணிக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.


இதனையடுத்து, லாவண்யாவை மீட்ட போலீசார் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.


இந்த  வழக்கில் சூர்யா (20) என்பவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பெண் ஊழியரின் இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது.


இந்த நிலையில் பெண் மென்பொறியாளரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.