சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் பணம் பறித்த தமிழக சிறப்புக் காவல்படை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று இரவு காத்திருப்பு அறையில் இருந்த பீகாரைச் சேர்ந்த பயணிகளிடம் போலீசார் 3 பேர் பணம் மற்றும் மொபைல் போனை பறித்துள்ளனர்.


இதுகுறித்து பயணிகளில் ஒருவர் ரயில்வே காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் பயணிகளிடம் பணம் மற்றும் மொபைல் போனை பறித்த மூன்று பேரும் தமிழக சிறப்புக் காவல்படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்துள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் மூவரையும் கைது செய்ய ரயில்வே காவல்துறை ஐஜி பொன்.மாணிக்கவேல் உத்தரவிட்டார்.


இருதயராஜ், அருள்ராஜ், ராமலிங்கம் ஆகிய மூன்று போலீசாரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டியவர்களாகிய காவல்துறையினர் சீருடையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் சமயத்தில் பயணிகளிடம் பணத்தைப் பிடுங்கியுள்ள சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.