அதிமுக அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீது தேர்தல் கமிஷனிடம் இருந்து இரட்டை இலை சின்னத்தை பெற சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 17-ம் தேதி இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் தங்கள் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள். சுகேஷ் சந்திரசேகர் கைதானபோது அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சமும், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. 


டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்த டெல்லி போலீசார் அவருக்கு நேரில் சம்மன் வழங்கினார்கள். அதை ஏற்று கடந்த சனிக்கிழமை டெல்லி சென்ற டிடிவி தினகரனை போலீஸ் அதிகாரிகள் 7 மணி நேரம் விசாரித்தனர். 


2 நாளாக நேற்று முன்தினம் டிடிவி தினகரன், ஜனார்த்தனன், மல்லிகார்ஜூனா ஆகிய மூவரையும் ஒரே அறையில் வைத்து உதவி கமிஷனர் சஞ்சய் ஷெராவத், துணை கமிஷனர் மதுர் வர்மா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.


பிற்பகல் முதல் நள்ளிரவு வரை அவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்கள் அளித்த பதில்களை பதிவு செய்தனர். 


இந்நிலையில், நேற்று 3-வது நாளாக விசாரணை தொடர்ந்தது. இதற்காக ஜனார்த்தனனும், மல்லிகார்ஜூனாவும் பிற்பகல் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு வந்தனர். முதலில் அவர்களிடம் தனியாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் பின்னர், சுகேஷ் சந்திரசேகரையும் அவர்களுடன் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அவர்களிடம் இரவு வரை விசாரணை நடைபெற்றது.


இன்று மாலை 5 மணிக்கு மீண்டும் ஆஜராக வேண்டும் என டிடிவி தினகரனுக்கு டெல்லி குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.